Archives: செப்டம்பர் 2020

அன்பில் வேரூன்றி

“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.

அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).

ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை -  தேவனின் அன்பில் வேரூன்றுவதும்,  நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!

பார்ப்பதற்கு கண்கள்

‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.

வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது.  ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.

கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.  அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள்  அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16).  கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது –  வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).

ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.

தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.

ஒருபோதும் போதாது

சந்திரனை வட்டமிட்ட முதல் விண்வெளி பயணத்தை ஃபிராங்க் போர்மேன் நடத்திச் சென்றார். அவருக்கு அது திருப்திகரமாய் இல்லை. போய் வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது. ஃபிராங்குக்கு பயண நோய் வந்ததினால் இதை கைவிட்டுவிட்டார். முப்பது நிமிடங்கள் எடை இல்லாமல் இருந்தது நன்றாகவே இருந்தது என்று அவர் கூறினார். பிறகு அதற்கு பழக்கப்பட்டுவிட்டார். அருகில் சென்ற போது நிலவு மங்கியிருப்பதையும் குழி குழியாய் இருப்பதையும் கண்டார். அவரது குழுவினர் சாம்பல் நிற தரிசு நிலத்தை படமெடுத்த பின்னர் சலித்துவிட்டனர்.

இதற்கு துன்பு வேறு யாரும் போகாத இடத்திற்கு ஃபிராங்க் சென்றார். அது போதாததாயிருந்தது. இந்த உலகத்திற்கு வெளியே நடந்த அனுபவத்தால் அவர் விரைவில் சோர்வடைந்ததால் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமிக்குரிய எந்த அனுபவமும் நமக்கு இறுதியான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று பிரசங்கியை எழுதியவர் கவனித்தார். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (1:8). நாம் பரவசத்தின் தருணங்களை உணரலாம் ஆனால் அந்த உற்சாகம் தொய்ந்துப்போய் அடுத்த உணர்ச்சியூட்டும் காரியத்தை நாடுகிறோம்.

சந்திரனுக்குப் பின்னால் இருளிலிருந்து பூமி எழுவதைக் கண்ட காட்சி,  ஃபிராங்கிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாயிருந்தது. நீல மற்றும் வெள்ளை சுழல் பளிங்கு போல நம் உலகம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதே போல உண்மையான மகிழ்ச்சி நம்மேல் பிரகாசிக்கும் குமாரன் - நம்முடைய ஜீவன், நம் வாழ்வின் மூலாதாரணம், அன்பு, மற்றும் அழகிற்கு இறுதி ஆதாரமயிருக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது. நம்முடைய ஆழ்ந்த திருப்தி இந்த உலகத்தின் வெளியிலிருந்து வருகிறது. நம்முடைய பிரச்சனை? நாம் இங்கிருந்து சந்திரனுக்கு செல்லலாம், ஆனாலும் நாம் வெகு தூரம் செல்லவில்லை.

அலைந்து திரிவது

கால்நடை பண்ணைக்கு அருகில் வசித்து வந்த மைக்கேல் என்ற நகைச்சுவை நடிகர், மேய்ச்சலின் போது, மாடுகள் தன்னைப் போலவே எப்படி அலைந்து திரிகிறது என்பதை கவனித்தார். மாடு பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி நகர்ந்துக் கொண்டே இருக்கும். பண்ணையின் ஓரத்தில் ஒரு நிழல் மரத்தின் கீழ் பசுமையான புற்களை கண்டுபிடிக்கும். உடைந்துப்போன வேலிக்கு அப்பால் சுவையான பசுமையான ஒரு கொத்து இருந்தது. பின்னர் மாடு வேலிக்கு அப்பால் சென்று பிறகு சாலையிலிருந்தே வெளியேறக்கூடும். பின்னர் அது மெதுவாக தன் வழியிலிருந்து காணாமல் போய்விடும்.

இந்த சுற்றித் திரிகிற பிரச்சனை மாடுகளுக்கு மட்டும் இல்லை, ஆடுகளும் சுற்றித் திரிகின்றன, ஆனால் மனிதர்களும் வழியை விட்டு விலகுகிப் போகிற போக்குள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இதனால் தான் வேதாகமத்தில் தேவன் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். பொறுப்பற்ற சமரசங்கள் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எளிதாக எடுத்து நாம் அலைந்து திரிந்தும், வழியைவிட்டு விலகியும் விடுகிறோம். ஆனால், சத்தியத்தை விட்டு எவ்வளவோ விலகி சென்று விட்டோம் என்பதை நாம் கவனிக்கிறதில்லை.

பரிசேயர்களுக்கு, இயேசு காணாமல் போன ஆட்டின் கதையை கூறினார். தன்னிடமிருந்த தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்ற மேய்ப்பனுக்கு அந்த ஒரு ஆடு மிகவும் மதிப்புள்ளதாய் இருந்தது. காணாமல் போன அதை அவன் கண்டுப்பிடித்த போது அவன் சந்தோஷப்பட்டான் (லூக். 15:6).

மனந்திரும்பி அவரிடம் வருபவர்களினிமித்தம் தேவனும் அப்படியே சந்தோஷப்படுவார். காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் (வ 6) என்று இயேசு கூறுகிறார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் பாரலோகம் சேர்க்கவும் தேவன் நமக்காக ஒரு இரட்சகரை அனுப்பினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.